புதுச்சேரி தாவரவியல் பூங்கா உல்லாச ரயில் பழுதால் சிறுவர்கள் ஏமாற்றம்!
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் சிறுவர்களுக்காக 1974ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உல்லாச ரயில், கடந்த 50 ஆண்டுகளாக சிறுவர் மற்றும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்காக இருந்து வந்தது.
சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி செலவில் சுதேசி மில் வளாகம் மற்றும் தாவரவியல் பூங்கா புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் ரூ.150 கோடி செலவில் பேட்டரி மூலம் இயங்கும் புதிய உல்லாச ரயில் பூங்காவுக்கு வழங்கப்பட்டது.
புதிய வடிவில் சீரமைக்கப்பட்ட பூங்கா கடந்த அக்டோபர் 27ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் திறந்த சில நாட்களிலேயே, சிறுவர்களுக்காக இயக்கப்பட்ட புதிய பேட்டரி ரயில் திடீரென பழுதடைந்தது.
ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பழைய ரயில் இன்ஜின் செயலிழந்த நிலையில், தற்போது புதிய ரயிலும் பழுதாகியுள்ளதால் பூங்காவுக்கு வருகிற சிறுவர்கள் மற்றும் குடும்பங்கள் வருத்தமடைந்துள்ளனர்.
பயணிகள் வசதிக்காக புதிய ரயில் விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


